பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் மாதம்


எதிர்வரும் மாதமளவில் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இந்நாட்டில் 54 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பொறுப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் மாதமளவில் இந்த இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான வேலைவாய்ப்பை சிறந்த பயிற்சியின் பின்னர் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பட்டதாரிகளை நாம் அலுவலகங்களுக்கு இணைத்து கொள்ள எதிர்பார்க்கவில்லை. கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்களில் அனேகமானோருக்கு அலுவலகங்களில் அமர்வதற்கு தளபாடங்கள் கூட இருக்கவில்லை. அவர்களிடம் இருந்து உரிய பயன்பாட்டினை நாடு பெறவில்லை.

இம்முறை அனைத்து பட்டதாரிகளினதும் திறமைகளை இனங்கண்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சியினை அளித்து அவர்களின் கல்வித் திறனை நாட்டின் எதிர்காலத்திற்காக பயன்படுத்தும் வேலைத்திட்டதை செயற்படுத்த அரசாங்கம் என்ற வகையில் நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.