கள்ளக் காதலால் வந்த விபரீதம்


(க.கிஷாந்தன்)

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் 19.01.2020 அன்று இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பத்தில் பலியான நபருக்குமிடையில் தகாத உறவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபரை தாக்கியுள்ளார்.

இதன் போது சம்பவ இடத்தில் கள்ள காதலன் பலியானதோடு, கொலை செய்த நபர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியான நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி. சசேந்திர பெர்ணாண்டோ வயது 43 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களை விட்டு ஆராய்ந்ததோடு, நீதவானும் மரண விசாரணைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட உள்ளதாகவும், கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருக்கும் நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸாரும், நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.