ஆப்கன் அதிபர் #அஷ்ரப் கனி பதவியேற்பு விழாவில் அடுத்தடுத்து குண்டுகள்



ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியேற்பு விழாவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அப்துல்லா அப்துல்லா என்பவர் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் இறுதியாக, கடந்த மாதம் வெளியாகின. அதில் அஷ்ரப் கனி 50.64 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.எதிராக போட்டியிட்ட, அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை அப்துல்லா அப்துல்லா ஏற்க மறுத்துவிட்டார். இது முறைகேடான வெற்றி என அறிவித்தார். எனவே, அஷ்ரப் கனி பதவியேற்புக்கு போட்டியாக, தனக்கு தானே அதிபராக அறிவித்து பதவியேற்பை நடத்தினார். இதனால் அரசியல் நெருக்கடி அங்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், இன்று மதியம், காபூலிலுள்ள அதிபர் மாளிகையில், அஷ்ரப் கனி அதிபராக பதவியேற்றார். அஷ்ரப் கனியின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க சிறப்பு தூதர் சல்மே கலீல்சாத் மற்றும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் தளபதி ஜெனரல் ஸ்காட் மில்லர் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சர்வதேச சமூகம், அஷ்ரப்புக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. எனவே அவரும், பதவியேற்க முன் வந்தார். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அதிபர் பதவியேற்றபோதே, திடீரென டமால் என சத்தம் கேட்டது. மேடையே ஆடிப்போனது. அடுத்தடுத்து சத்தம் காதை பிளக்க தொடங்கியது. கூடியிருந்த பெண்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினர். பாதுகாவலர்கள், அஷ்ரப் அருகே வந்து சூழ்ந்து கொண்டனர்.

அங்கே அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்படுகிறது, என்பதை உணர அங்குள்ள மக்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அதிபருக்கும்தான்.