தனியான ஒரு நிதியம் ஏற்படுத்த வேண்டும்




(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஓரிரு தினங்களில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர். ஆர்.எம்.பீ. புஷ்பகுமார தன்னிடம் தெரிவித்ததாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் 27.03.2020 அன்று நடைபெற்ற ஊடகவியவாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளிலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவது தொடர்பாக இன்று காலை (27.03.2020) நான் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெளிவுப்படுத்திய பொழுதே அவர் என்னிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்தார்.
அதனடிப்படையில் ச.தொ.ச நிறுவனம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடன் அடிப்படையில் மானிய விலையில் வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றது. இதனை தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கி அந்த தொகையை அவர்களுடைய எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அந்த தொகையை அறவிடுவதற்கு கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இதன்போது நான் அவரிடம் இந்த செயல்பாடுகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். அதேநேரத்தில் இவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற பொழுது நாங்கள் கட்சி, தொழிற்சங்க அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு மலையக மக்களுக்காக ஒரு நிதியத்தை ஏற்படுத்தி அதில் அதனை அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் தெரிவு செய்து அதனை சுயாதீனமாக இயங்குவதற்கான ஏற்பாடு ஒன்றை செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் அந்த நிதியத்திற்கு வர்த்தகர்களும், தனவந்தர்களும் உதவி செய்வதற்கு முன்வருவார்கள். எனவே இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த எந்நவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.