விற்பனை செய்யமுடியாத நிலை


(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதாலும் மொத்த வியாபாரிகள் தமது பகுதிகளுக்கு வருவதில்லை என்றும், 
 மரக்கறி வகைகளை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அறுவடைசெய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கும் மரக்கறிகள் பழுதடைய ஆரம்பித்துள்ளன. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில வியாபாரிகள், குறைந்த விலைக்கு விளைச்சல்களை வாங்கி வருகின்றனர்.
 

இவர்களின் இத்தகைய நடவடிக்கை மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மாட்டும் கதைபோல் உள்ளது என விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

அத்துடன், மரக்கறி தோட்டங்களில் வேலைசெய்த ஊழியர்களுக்கு சம்பளத்தைகூட வழங்கமுடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு வருகை தந்திருந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
 

“ மரக்கறிகளை விநியோகிப்பதற்கு உரிய நடைமுறை இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நாளில் அதிகளவானோர் வருகின்றனர். அப்போது வழங்குவதற்கு மரக்கறி வகைகளும் இருக்காது. அடுத்த தவணையில் மக்கள் கூட்டமே இருக்காது.

மரக்கறி விற்பனை செய்பவர்களும் வருகின்றனர், விற்பனையில் ஈடுபடாதவர்களும் வருகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன.” – என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ராதாகிருஷ்ணனிடம் வினவியபோது,

“ அரசால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் குறித்து திருப்திகொள்ள முடியாது. சிறு வியாபாரிகளுக்கு பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வந்து, மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யமுடியாத நிலை ஏற்படும். ஒரு புறத்தில் விவசாயிகளும், மறுபுறத்தில் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டிவரும்.

மரக்கறி விவசாயிககள் மரக்கறி வகைகளை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் தலையிட்டு தீர்வை பெற்று தரவேண்டும். " - என்றார்.