ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்,பிரார்த்தனை


(வி.சுகிர்தகுமார்) 
(வி.சுகிர்தகுமார்) 
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 7 வருடங்களுக்கு மேல் கணக்காளாராக சேவையாற்றி 51ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக கடந்த 13ஆம் திகதி உயிரிழந்த அமரர் குமரன் கேசகன் அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகள் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று(17) நடைபெற்றது.


பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் தலைமையில் இடம்பெற்ற பிரார்த்தனை மற்றும் நினைவுச்சுடரேற்றல் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா, தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஆ.சசீந்திரன் நிதி உதவியாளர் க.விஜயகுலேந்திரன் உள்ளிட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பெருந்திரளான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அமரத்துவமடைந்த கணக்காளரின் உருவம் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் முதல் நினைவுச்சுடரினை உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் ஏற்றி வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து உயர் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும்; சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மலர்தூவி பிரார்த்தித்தனர்.

பின்னர் அமரர் க.கேசகன் தொடர்பான நினைவுப்பேருரையினை அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து வழங்கினர்.

அமரத்துவமடைந்த கணக்காளர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 7 வருடங்களுக்கு மேல் கணக்காளாராக சேவையாற்றியதுடன் 20 வருடத்திற்கும் மேலான சேவைக்காலத்தை கொண்டவர் என்பதும் தனது முதல் அரச சேவையினை கணக்காய்வாளராக ஆரம்பித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.