செல்பேசித் திருடர்கள், மாட்டினர்


தாயினால் மாட்டிக்கொண்ட தொலைபேசி திருடர்கள்

(பாறுக் ஷிஹான்)

வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கடந்த 15.05.2020 அன்று சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில் பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைத்தொலைபேசிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பறித்து செல்லப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சி.ஐ றபீக் வழிகாட்டலில் சுமார் ஒரு மாத காலமாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மேற்குறித்த வீதிகளில் கைத்தொலைபேசிகளை பறித்து சென்ற இருவர் புதன்கிழமை(17) கைதாகினர்.

குறித்த கொள்ளையர்கள் கைத்தொலைபேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை சிசிடிவி காணோளி காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட பொலிஸார் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களை தாயின் உதவியுடன் கைது செய்தனர்.

குறித்த கைது நடவடிக்கைக்குபொலிஸாருக்கு கைதான சந்தேக நபரின் தாய் ஒத்துழைப்பு வழங்கியதுடன் கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.