தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும்




 (க.கிஷாந்தன்)

 

அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

அட்டனில் (16.08.2020) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

" புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 28 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மலையக தமிழருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 1977 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை அமைச்சரவையில் மலையக தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இம்முறை அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

 

அதேபோல் புத்தசாசனத்துக்கு தனி அமைச்சொன்று இருக்கும் நிலையில், ஏனைய மதங்களுக்கான அமைச்சுகள் நீக்கப்பட்டு சமய விவகார அமைச்சென உருவாக்கப்பட்டு அவை சார்ந்த திணைக்களங்கள் பிரதமரின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும். அத்துடன் சில அமைச்சுகள் பொருத்தமற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

 

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. அதனை முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம். வேண்டுமானால் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 13 ஆவது திருத்தச்சட்டமானது சிறுபான்மையின மக்களுக்காக உருவானது. அதில் கைவைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.

 

தமிழ் முற்போக்கு கூட்டணியாக சில விட்டுக்கொடுப்புகளை செய்து பயணித்ததாலேயே 100 வீத வெற்றி கிடைத்தது.வருகின்ற தேர்தல்களிலும் முற்போக்கு கூட்டணியாகவே முடிவுகளை எடுப்போம். எதிரணியில் இருந்தாலும் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதற்கு எதிராகவும் நீதிக்காகவும் உரத்து குரல் எழுப்புவோம்." - என்றார்.

Attachments area