நால்வருக்கு பிணை ஏனைய நால்வருக்கு விளக்கமறியல்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)




கைத்தொலைபேசிகளை களவாடி  விற்பனை செய்து வந்த  சம்பவத்தில் கைதாகிய   8 சந்தேக நபர்களில் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு    சம்மாந்துறை  நீதிவான் உத்தரவிட்டார்.

வெள்ளிக்கிழமை (6)    அம்பாறை    சம்மாந்துறை பகுதியில் உள்ள கடை ஒன்றில்  தொடர்ச்சியாக 20க்கும் அதிகமான விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால்  சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் 8 சந்தேக நபர்கள் கைதாகினர்.

இச்சந்தேக நபர்களை கைது செய்வதற்காக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின்  படி  அம்பாறை கல்முனை பிராந்திய  பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையினூடாக      சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலில்    சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன்   தலைமையில்  சென்ற சார்ஜன்ட் ஆரியசேன (24893) கன்டபிள்களான துரைசிங்கம்(40316) ஜகத்(74612)  குழுவினர்  ஈடுபட்டிருந்தனர்.


குறித்த நடவடிக்கையின் போது குறித்த கைத்தொலைபேசி விற்பனை செய்யும் கடையில்  பணியாற்றிய இருவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக களவாடி விற்பனை செய்து வந்துள்ளமையை  குறித்த கடையில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காணொளியினை அடிப்படையாக கொண்டு அடையாளங் கண்ட பொலிஸார்  விசாரணை மேற்கொண்ட நிலையில்  முதலில் குறித்த அக்கடையில் பணியாற்றிய இரு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது களவாடப்பட்ட கைத்தொலைபேசிகளை வாங்கியதாக சந்தேகத்தில்  சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பகுதியில்  உள்ள தொலைபேசிகளை வாங்கி  விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் இருவர்  கைதாகினர்.இவ்வாறு கைதான இருவரையும்  கொண்டு முன்னெடுக்கபட்ட மேலதிக விசாரணையின் போது பெண்  ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைதாகினர்.

தொரடந்து இவ்வாறு கைதான 8 சந்தேக நபர்களது தகவலின்படி களவாடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளில் காரைதீவு பகுதியில் இருந்து 8 கைத்தொலைபேசிகளும் சாய்ந்தமருதில் இருந்து 10 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.

அதே வேளை குறித்த சம்பவத்தில் கைத்தொலைபேசிகளை களவாடியவர்கள் அதை  வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உட்பட   8  சந்தேக நபர்கள் இன்று (7)   சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட கைத்தொலைபேசியை கொள்முதல் செய்த மற்றுமொருவர் உள்ளடங்களாக நால்வருக்கு   தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில்   இருவர் வீதம் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய 4 சந்தேக நபர்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.