நுவரெலியா மாவட்டத்தில் 208 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்



 (க.கிஷாந்தன்)

 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலை மூலம் நுவரெலியா மாவட்டத்தில் இன்று (06.12.2020) காலை வரை 208 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதுவரை 4 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், சுமார் 311 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்  நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்தார்.

 

நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், வெளிஓயா தோட்டத்தில் தண்டுகள பிரிவு, பொகவந்தலாவ பொகவன பகுதியில் குயினா தோட்டம், கினிகத்தேனை பிளக்ஹோட்டர் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையின் போது நுவரெலியா மாவட்டத்துக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஓரிரு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அதுவும் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக தோட்டப்பகுதிகளில் வைரஸ் பரவவில்லை.

 

எனினும், 2ஆது அலையான உருவான பேலியகொட கொத்தணிமூலம், மீன்வாங்க சென்ற பலருக்கு வைரஸ் தொற்றியது. இதன்மூலம் தோட்டப்பகுதிகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் தீபாவளி பண்டிகைக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் தற்போது வைரஸ் பரவி வருகின்றது.

 

அதேவேளை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.