நுவரெலியா மாவட்டத்தில் 334 தொற்றாளர்கள்


 


(க.கிஷாந்தன்)

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" பிரதேச சபை தவிசாளரிடம் இரண்டாவது தடவையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன. அரசாங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது அவர் எவ்வாறு செயற்பட்டுள்ளார் என்பதனை ஆராய்ந்த பின்னரே பிரமுகர்களை தனிமைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கபடும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய பிரதேச சபை தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரசாங்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்வர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பின்றி நுவரெலியா பகுதிகளுக்கு சுற்றுலா வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை 7 ஆயிரத்து 715 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 334 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்." - என்றார்.