அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டோர், அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்





வி.சுகிர்தகுமார் 0777113659  


  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பிரதேச செயலகங்கள் மாத்திரம் இயங்கு நிலையில்; உள்ளதுடன் அக்கரைப்பற்று மத்திய சந்தை உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டதுடன் வங்கிகளும் சேவையினை மட்டுப்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் உதவியினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிரதேச செயலகங்கள் ஊடாக மக்களுக்கான நிவாரணப்பணியினை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைவாக சமுர்த்தி மற்றும் கிராம உத்தியோகத்தர் ரீதியாக தகவல்களை திரட்டி மாவட்ட செயலகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதேநேரம் நேற்றைய நாள் மாத்திரம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவி;ற்குட்பட்ட பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 29ஆல் உயர்ந்துள்ளமையினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனடிப்படையில் அக்கரைப்பற்றில் 122ஆகவும் அட்டாளைச்சேனையில் 21 ஆகவும் ஆலைடிவேம்பில் 06ஆகவும் திருக்கோவிலில் 06ஆகவும் தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதுடன்
இருந்தபோதிலும் சுகாதாரத்துறையினர் இரவுபகல் பாராது நாளாந்தம் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு  பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். மேலும் நோய் தொற்றை தடுப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும் மக்களுக்கு வழங்கி வருவதாகவும் மக்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் இத்தொற்றுநோயை முற்றாக அகற்றி வெற்றிகாண முடியும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களுக்கான அர்ப்பணிப்பு மிக்க பணியை ஆற்றிவரும் சுகாதாரத்துறையினர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மக்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.