அட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு ஒரு கடைக்கு வழக்கு தாக்கல்.




(க.கிஷாந்தன்)

அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட அட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் நபர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த நபர் அட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த கடைகள் அட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு புடவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் நாளை முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதே வேளை குறித்த நபர் அட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார் எனினும் குறித்த வங்கியில் முறையாக சுகாதார வழிமுறைகள் பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சீ.சீ.டீ.வீ கமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.