அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை விவசாயிகளுக்கு அனுமதி



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கொரோனா பரவலின் மத்தியில் விவசாயிகளின் தற்கால நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(5) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் முற்பகல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமை தாங்கியதுடன் விவசாய அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்முனை பிராந்தியத்தில் உள்ள   பகுதியில்  கொரோனா பரவலின் மத்தியில் விவசாயிகளின் தற்கால நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் விவசாயிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தல்,நாட்களை வரையறுத்தல்,வயலுக்கு சென்று வரும் நேரத்தினை வரையறுத்தல்,கொறோனா தொற்று நோயாளிகளுடன் தொடர்பினை கொண்ட விவசாயிகள்  மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுதல்,அனுமதி தொடர்பான வரையறைகளும் பொறிமுறைகளும் அனுமதி வழங்கியதன் பின்னர் மேற்பார்வை செய்தல், போன்ற பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

தொடர்ந்து மேற்குறித்த பிரச்சினைகளுக்கு 

அடுத்துவரும் 07 நாட்களுக்குள் மூன்று கமநல சேவை மத்திய நிலையங்களான அக்கரைப்பற்று கிழக்கு - 300, அக்கரைப்பற்று மேற்கு - 400, அட்டாளைச்சேனை -100 ,பிரிவுகளிலிமிருந்து விவசாயிகள் அதிஉட்சமாக வேளாண்மை நடவடிக்கைக்காக நாளாந்தம் அனுமதிக்கப்படுவார்கள்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்குள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு அனுமதி இல்லை, அனால் அவர்களின் விவசாய காணி நடவடிக்கைகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள விவசாயிகளைக் கொண்டு மேற்கொள்ள முடியும்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஏனைய நிருவாக பிரதேசங்களுக்குள் விவசாயிகளின் நடவடிக்கை தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குரிய பொறுப்பு அதிகாரிகளோடு கலந்துரையாடிய பின்னர் முன்னெடுக்கப்படும்

நாளுக்கு ஒரு நிறத்திலான அனுமதி அட்டை வழங்கப்படும். அதனை கமநல அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்யும், 

விவசாயிகளின் விபரங்கள் 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு சமர்பிக்கப்படவேண்டும்

விவசாயிகள் காலை 6.00மணிக்கு முன்னர் தத்தமது பிரதேசங்களில் இருந்து வேளான்மை நிலங்களுக்கு சென்று விடவேண்டும்

வேளான்மை நில  பிரதேசங்களில் உள்ள தேனிர் கடைகளுக்கு அனுமதி இல்லை

அவர்களுக்கு தேவையான உணவுகள் அவர்களினால் எடுத்துச் செல்லப்படவேண்டும்.

 விவசாயிகளின் செயற்பாடுகள் பொலிஸ், முப்படையினர், விமானப்படையினர், மாவட்ட விவசாயிகளின் அமைப்புக்களின் அதிகார சபை, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அமைப்பின் பொறுப்பானவர்களினால் மேற்பார்வை செய்யப்படும்.

கொரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்துவிதமான செயற்பாடுகளும்  சகல விவசாயிகளினாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

சுகாதார  அமைச்சினால் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறும் விவசாயிகள் மற்றும் பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 மேற்குறித்த தீர்மானங்கள் ஒன்றோ அல்லது பலதும் அவ்வப்போது எமது பிராந்தியத்தில் காணப்படும்  COVID  19  களநிலவரத்துக்கு ஏற்ப மாறுபடும் என கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதி பணிப்பாளர்  வைத்தியர்  ரி.எஸ்.ரி.ஆர்  றஜாப் , பிராந்திய தொற்று நோய் தடுப்பியலாளர் வைத்தியர் என்.எப்.  ஆரிப் ,மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  எம்.ஏ. ஜஃபர் , மாவட்ட விவசாயப் பணிப்பாளர்   எம்.எஸ்.ஏ. கலீஸ் ,அம்பாரை மாவட்ட விவசாய அமைப்பு அதிகாரி சபை செயலாளரும்    தேசிய விவசாய அமைப்பு அதிகார சபை உறுப்பினரும் தொடர்பாடல் இணைப்பாளர் எம்.ஏ. ஸபிஹ் , அக்கரைப்பற்று – கிழக்கு அட்டாளைச்சேனை  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல். சம்சுடீன் ,  அக்கரைப்பற்று – மேற்கு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.ஏ. ஹமீட் ,  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.