கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்!



 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடர் போராட்டங்களை நடத்திவரும் உறவுகள், கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை தீச்சட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடும் மழைக்கு மத்தியிலும் தீச்சட்டிப் போராட்டம் காலை 10.00 அணிக்கு ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த தீச்சட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் சென்றடைந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், தமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, சர்வதேசமே பதில் சொல், வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.