வீடுகளில் இருந்தபடியே வெசாக் தினம்


 


(க.கிஷாந்தன்)

 

வருடாந்தம்  மே மாதம்  பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும். அந்தவகையில் வெசாக் நோன்மதி தினம் இம்முறை இலங்கையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடப்பட்டது. மலையகத்தில் வாழும் பௌத்தர்களும் வீடுகளில் இருந்தபடியே ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

 

வெசாக் தினமான மே மாத பெளர்ணமி நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (பரி நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

 

இந்நாளில் இலங்கையில்  புத்தபெருமானின் வாழக்கை வரலாற்றை முன்னிறுத்தி பலவித சமய நிகழ்வுகள் இடம்பெற்று வந்ததுடன், இக்காலப் பகுதியில் தண்ணீர்ப் பந்தல்கள், அன்னதான உணவு வழங்கும் பந்தல்கள், தோரணங்கள், வெளிச்சக் கூடுகள் கட்டப்பட்டு நாடு முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கும். மலையகம் உட்பட இலங்கையிலுள்ள அனைத்து விகாரைகளிலும் விசேட வழிபாடுகள் இடம்பெறும்.

 

எனினும்,  கடந்த வருடங்களில் ஈஸ்டர் குண்டுதாக்குதல் மற்றும் கொரொனா வைரஸ் காரணமாக பாதுகாப்பு தரப்பின் ஆலோசனைக்கு அமைய பொதுவெளியில் தோரணங்களைக் காட்சிப்படுத்தல், அன்னதானம் வழங்குதல் போன்றன நிறுத்தப்பட்டிருந்தன.

 

இம்முறையும் அதிகளவிலான கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு நடைபெறும் பிரதான நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு உத்தரவு அமுலில் இருப்பதால், பௌத்தர்களின் வீடுகளுக்கு முன்னால் மின் விளக்குகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. வீட்டுக்குள் இருந்தபடியே வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

 

விகாரைகளில் அங்குள்ள தலைமை விகாராதிபதியின் தலைமையில் வழிபாடுகளும், போதனைகளும் இடம்பெற்றன.