ஒக்சிஜன் வழங்கலில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கெஹெலிய கோரிக்கை


 


இலங்கைக்கு ஒக்சிஜன் வழங்குவது தொடர்பில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதிகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சுவசிறிபாய – சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதி தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமானதொன்று எனவும், ஒக்சிஜன் தேவைப்பாடு தொடர்பில் முன்னுரிமை வழங்கி, இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, Tocilizumab மருந்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.