மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் - தடுத்து நிறுத்திய பொலிஸார்





(செ.திவாகரன்)

 மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று (25) ஹட்டன் பகுதியில் இரண்டு ஆசிரியர்களால் நடத்தப்பட்ட தனியார் வகுப்பைத் தடுத்து நிறுத்த ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர் டபிள்யூ. ஆர். ஏ. டி. சுகததாச நடவடிக்கை எடுத்துள்ளார்.


ஹட்டனின் ஹிஜிராபுர பகுதியில் குறைந்தபட்ச வசதிகள் கொண்ட ஓர் இடத்தில், ஹட்டனில் இயங்கும் தமிழ்ப் பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில், தலைமையக பொலிஸ் ஆய்வாளர் அந்த இடத்திற்குச் சென்று அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் விளக்கம் அளித்து சட்டவிரோத செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் வகுப்பில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப தலைமையக பொலிஸ் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது மேலும் தனியார் வகுப்பு நடத்துவதற்கு தடை விதித்துத்துள்ளனர். இந்தத் தீர்மானம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


(செ.திவாகரன்)