உண்ணாட்டரசிறை சட்டமூலத்தை ஏற்கமுடியாது




“வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாவிடின் 06 மாத காலம் சிறை செல்ல நேரிடுமென்று உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்தச் சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தப்பட வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


‘‘மக்கள் விடுதலை முன்னணி, இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டதே வரலாறு. 1994ஆம் ஆண்டு சந்திரிகாவின் அரசாங்கத்தில் ஒன்றிணைந்தார்கள். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவந்து அரச வருமானத்தை வீழ்ச்சிக்குக் கொண்டுசென்று நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளினார்கள். இதுதான் 75 ஆண்டுகால சாபம். இந்த சாபத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு பிரதான பங்குண்டு.


பலவந்தமான வகையில் வரிக் கொள்கையை அமுல்படுத்த முடியாது. வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாவிடின் 6 மாத காலம் சிறை செல்ல நேரிடும் என்று உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்தச் சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தப்பட வேண்டும்.


பலவந்தமான முறையில் வரியை அறவிடுவதற்கு சட்டம் இயற்றும் அரசாங்கம் 4 கம்பனிகளுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது? முறைமை மாற்றம் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கமைய நடுத்தர மக்களின் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கமைவாகவே செயற்படுகிறது. மின்சாரம், எரிபொருள், எரிவாயு விலைகள் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்படுகின்றன. மக்களின் பக்கம் இருந்துகொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் சகல தீர்மானங்களும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளன’’ என்றார்.