நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 40,299 பல்வேறு வகையான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
அவற்றில் 27,376 வழக்குகள் குற்றவியல் வழக்குகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 37 மேல் நீதிமன்றங்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் மூன்று நீதிமன்றங்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை தாமதத்தை குறைக்கும் நோக்கில், குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் மேல் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 60 ஆக அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அவர் பரிந்துரை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலைமையில், ஒரு மேல் நீதிமன்றத்தில் சராசரியாக 800 வழக்குகள் வரை விசாரணைக்காக நிலுவையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர், மேல் நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் வசதிகளையும் அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேவேளை, வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருப்பது சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.webp)

Post a Comment
Post a Comment