வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களைக் குறிப்பிட்டு பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு, ஜூலை 11 அன்று கவிழ்ந்தது.
'துவோய் த்ரே' நாளிதழின்படி, 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, 'மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது.
படக்குறிப்பு,அரசு ஊடக தகவல்களின்படி, வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவுக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது
விபத்து எப்படி நடந்தது?
ஹோன் மே ரூட் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரம் சென்ற பிறகு, அதிவேகப் படகில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அது கவிழ்ந்தது. இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் பலத்த காற்றும், உயரமான அலைகளும் வீசுவதை ஒரு காணொளி காட்டுகிறது. மீட்புக் குழுவினர் நீரில் இருந்தவர்களை நோக்கி உயிர் காக்கும் மிதவைகளை வீசுவதும், ஜெட் ஸ்கி-கள் மூலம் மீட்கப்பட்டவர்களைக் கரைக்குக் கொண்டு செல்வதையும் அந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது.
இந்த மீட்புப் பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை இரண்டு படகுகளையும் 35 பணியாளர்களையும் ஈடுபடுத்தியது. இந்த நடவடிக்கையில் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் பிற தொடர்புடைய முகமைகள் இணைந்து செயல்பட்டன.
இந்த விபத்து ஹோன் மே ரூட் தீவில் நடந்துள்ளது. இந்தத் தீவு அதன் இயற்கை அழகுக்காகப் பிரபலமானது மற்றும் ஃபூ குவோக் தீவின் மிகச் சிறந்த பவளப்பாறை டைவிங் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோதி கூறியது என்ன?
வியட்நாம் விபத்து குறித்து பிரதமர் மோதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வியட்நாமின் ஃபூ குவோக் அருகே இந்திய குடிமக்கள் பயணித்த படகு விபத்து குறித்த துயரமான செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்."
"தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."
"நமது தூதரகமும் தூதரக அதிகாரிகளும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர். நமது அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
லாவா மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் சில சேனல் பார்ட்னர்களும், குழு உறுப்பினர்களும் விபத்தில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மொபைல் நிறுவன விநியோகஸ்தர் முருகபிரபு இந்த விபத்தில் உயிரிழந்ததாக அவரின் உறவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விபத்து, வியட்நாம், பாதுகாப்புப் படையினர், வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்து, பிரதமர் மோதி, ஃபு குவோக் தீவுபட மூலாதாரம்,TNDIPR
வியட்நாமில், இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்தப் படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
அதோடு, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
மேலும், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment