ஒலி உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பொலிஸார், அறிவிப்பு



 


ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான சட்ட ஒழுங்கு குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். 


இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மற்றும் பிற ஒலி உபகரணங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தி, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட நடைமுறையிலுள்ள உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.


இரவு நேரங்களில் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் அசௌகரியங்களைத் தடுக்கும் நோக்கிலேயே இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும்,மத அல்லது விசேட நிகழ்வுகளின் போது உரிய விடயங்களைக் கருத்திற்கொண்டு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நேரங்கள்: 


திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை: இரவு 10.00 மணி வரை 


வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்: அதிகாலை 01.00 மணி வரை 


ஞாயிற்றுக்கிழமைகளில்: அதிகாலை 12.30 மணி வரை 


எவ்வாறாயினும், இந்த நேர வரையறைகள் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்கு தானாகவே கிடைக்கும் உரிமையல்ல என்றும் அனுமதி பெறப்பட்டிருந்தாலும், ஒலியானது சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பேணப்படுவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.