பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது - 02, ஒராபிபாஷா வீதியில் வசித்து வந்த 5 பிள்ளைகளின் தாயாரான அலியார் முகம்மது முகைதின் றம்ஸானா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (15) வீட்டிலிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இவர், உடனடியாகக் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பதில் நீதிவானின் கட்டளைக்கமைய சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எஸ்.எம் றியாஸ்டீன் தலைமையில் மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன. உடற்கூற்று பரிசோதனையின் போது, தீக்காயங்களினால் ஏற்பட்ட தீவிர பாதிப்பு காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இத் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் காரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment