
பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடமிருந்து 650 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகங்களினூடாக பரிசீலனை செய்யப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற தவறும் பொலிஸார் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உரிமையுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமது கடமைகளை நிறைவேற்ற தவறிய பொலிஸார் தொடர்பில் பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்குதம் பட்சத்திலேயே அது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பொதுமக்கள் அச்சமின்றி தமது முறைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 0710 36 10 10 எனும் தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
