
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
நிலங்கள் எடுக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. அங்கு கடற்படையினருக்கான முகாம் ஒன்றை அமைப்பதற்காகவே நிலம் கையகப்படுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இது மறைமுகமாக சிங்கள மக்களின் குடியேற்றத்துக்கு உதவும் நடவடிக்கை என, வட மாகாண சபையின் துணை அவைத் தலைவர் அண்டனி ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.
வட்டுவாகல் பகுதியிலேயே நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன
கடற்படையினருக்கு முகாம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவையில்லை என்றும், அந்தப் படைத்தளத்தை மையமாக வைத்து சிங்களச் சிப்பாய்களை குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் கூறுகிறார்.
பரம்பரை பரம்பரையாக தான் உட்பட அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தமது நிலங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று சனிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் தாங்கள் கூறியதாகவும் அவர் கூறுகிறார்.
