யோஷித ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பிலும் விசாரணை




இலங்கையில் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் பணியாற்றிய காலத்தில், கடற்படை விதிமுறைகளை மீறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை தொடர்பில் தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிதெரிவித்துள்ளார்.\

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு, கடற்படை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
யோஷித ராஜபக்ஷ எழுபதிற்கும் அதிகமான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்த நிலையில், அவற்றில் நாற்பது பயணங்களுக்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, அனுமதி பெற்றுக்கொள்ளாமல் அவர் செய்த வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில்தான் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு யோஷித ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும்பட்சத்தில், கடற்படை விதிமுறைகளுக்கமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்