ஏறாவுர் பெண் மீது கோடரி வெட்டு




பெண் மீது கோடரி வெட்டு
படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி;
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

வீதியில் நின்று ரகளை செய்து கொண்டிருந்த நபரொருவர் அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்து 28 வயதான பெண் மீது கோடரியால் வெட்டியதில் பெண் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 28.02.2016 இரவு நடந்த இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது ஏறாவூர் மீராகேணி கலந்தர் வீதியில்; சுலைமாலெப்பை றஷ்வியா (வயது28) என்ற பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த நபர்,  வீதியில் நின்ற சிலரை உனக்குத் தெரியாதா என்று கேட்ட மாத்திரத்தில் பெண்ணின் தலையில் கோடரியால் ஓங்கி வெட்டி விட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த பெண் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரவு 7 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த பெண் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.