மின்சாரம் தாக்கியதில் ஏறாவூர்வாசி மரணம்



மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்  தக்வா நகர் கிராமத்தில் சனிக்கிழமை பிற்பகல் மின்சாரம் தாக்கியதில் கூலித் தொழிலாளியொருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தைச் சேர்ந்த எம். அப்துல் றஸ்ஸாக் (வயது 30) என்பவரே மரணித்தவராகும்.
கிணற்றுக்கு நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

இவர் மின்சாரத்தில் இணைப்பை ஏற்படுத்தி நீர் இறைக்கும் இயந்திரத்தை கிணற்றுக்குள் பொருத்துவதற்காக நீர் இறைக்கும் இயந்திரத்தை கையால் தூக்கி எடுக்க முற்பட்டபோது முன்னதாகவே மின்னிணைப்பு பொருத்தப்பட்டிருந்த அந்த இயந்திரத்திலிருந்து மின் தாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வந்தபோதும் முன்னதாகவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.ஏறாவூர் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.