கடந்த 13 வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணுக்கு 66,800 சவுதி ரியால் நட்டஈடு வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மூன்று பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக 400 சவுதி ரியால் சம்பளத்திற்கு 13 வருடத்திற்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு சென்ற சேதா காதர் இஸ்மயில் ஆயிசா உம்மா என்ற பெண்ணுக்கே இவ்வாறு நட்டஈடு வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13 வருடங்களாக அடிமையாக பணியாற்றிய அப்பெண்ணுடைய கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு அப்பெண்ணின் எஜமான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்றபோதே இது குறித்து தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உயர்ஸ்தானிகராலயத்தினூடாக பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டு எஜமானான முபாரக் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான பிரயாணச்சீட்டு பெற்றுக்கொடுப்பதுடன் இதுவரை செய்த சேவைக்கான நட்டஈட்டையும் வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எஜமானாருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13 வருடங்களாக சவுதியில் அடிமையாக பணியாற்றிய இப்பெண்ணுக்கு தனது தாய் மொழியான தமிழ் மொழி பேச முடியாது மறந்து போயுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் மீண்டும் தாய் நாட்டுக்கு செல்வதற்கான வாய்ப்பை இப்பெண் பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
204 total views, 204 views today

