இந்திய நிவாரணப் பொருட்கள் இலங்கையில்





இலங்கையில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு அனுப்பிய 80 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தடைந்தன.
50 டன் நிவாரண பொருட்களை சுமந்து சென்ற சி 17 விமானம்
கடந்த மே 20-ம் தேதி இந்திய கடற்படையின் இரு கப்பல்கள் நிவாரண பொருட்களுடன் இலங்கையை நோக்கிப் புறப்பட்டன.
அதே நாளில், இந்திய விமான படைக்கு சொந்தமான சி 17 விமானம் 50 டன் நிவாரண பொருட்களுடன் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தது.
அந்த நிவாரண பொருட்களில், 700 கொட்டகைகள், 1000 தார்ப்பாய்கள், 10 ஜெனரேட்டர்கள், 100 எமர்ஜென்ஸி விளக்குகள், 10 ஆயிரம் பேருக்கு தொற்று நோய்களுக்கு எதிரான மருந்துகள், ஆடைகள், குடைகள் மற்றும் நீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் ஆகியன அடக்கம்.
30 டன் பொருட்களுடன் இரு இந்திய கப்பல்கள்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ என் எஸ் சட்லெக் மற்றும் ஐ என் எஸ் சுனைனா கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்தன.
இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற சுமார் 80 டன் நிவாரண பொருட்களை இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் முறைப்படி இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.