கிழக்கு பல்கலையில் ஏட்டிக்குப் போட்டி ஆர்ப்பாட்டங்கள்



கிழக்கு  பல்கலைக்கழகத்தின்  வந்தாறுமுலை  வளாகத்தில்  தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து ஏட்டிக்குப் போட்டியான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இடம்பெற்றன. 
தமிழ் மாணவர்களினால்  வந்தாறுமுலை வளாகத்தில்    கடந்த 18ம் திகதி முள்ளிவாய்கால் தினம் நினைவு கூறப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பான படங்களை தனது  முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த தமிழ் மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் கடந்த செவ்வாய்கிழமை  தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக காவல் துறையிலும்   புகார்  பதிவாகியுள்ளன.
சம்பவத்துடன்  தொடர்புடைய மாணவர்கள் மீது  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தமிழ் மாணவர்கள்   வளாகத்தின் முன்பாக ஒன்று கூடி  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஏற்கெனவேயும் சிங்கள மாணவர்களில் சிலர் இன ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும்  தமிழ் மாணவர்கள்  சுட்டிக் காட்டுகின்றனர்
தமிழ் மாணவன் மீதான தாக்குதல்  தொடர்பாக இரு சிங்கள   மாணவர்களுக்கு   பல்கலைக்கழக நிர்வாகத்தினால்  வெள்ளிக்கிழமை முதல்   விரிவுரைகளுக்கு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த தடையை  நீக்கக் கோரி  சிங்கள மாணவர்கள்  வெள்ளிக்கிழமை   பிற்பகல்  வளாகத்தின் பிரதான வாயிலை மூடி முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

சிங்கள  மாணவர்களின்  ஆர்பாட்டம்  காரணமாக   சுமார்  3  மணித்தியாலங்கள்  விரிவுரையாளர்கள் உட்பட எவரும்  வளாகத்திற்கு உள்ளேயிருந்து வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.
அங்கு காணப்பட்ட அமைதியற்ற சூழ்;நிலை  காரணமாக  கலகம் அடக்கும்   காவல் துறையினரும்   பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.