சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம்



நாட்டின் தேசிய பிரச்சினையாகியுள்ள சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு தூய குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கையின் வடமத்திய மாகாணத்திலேயே அதிக அளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்ற போதிலும், இந்த நோய் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வவுனியா மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருடமொன்றிற்கு ஐயாயிரம் பேர் புதிதாக சிறுநீரக நோயினால் பீடிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுமாறு உலக நாடுகளிடமும், நாட்டின் வர்த்தக சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு உரிய உதவிகள் கிடைத்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
வவுனியா போகஸ்வெவ என்ற கிராமத்தில் தூயகுடிநீர் விநியோக திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.