மஹிந்தவை விட ரணில் அதிகமாக பொய் சொல்கிறார்!



மஹிந்தவை விட ரணில் அதிகமாகப் பொய் சொல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீல நிறத்தை அகற்றி விட்டு பச்சை நிறத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் எவ்வித மாற்றமும் இல்லை. இன்னும் சிறிது நாட்கள் செல்லும் போது மஹிந்தவை விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகமாகப் பொய் சொல்வதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் எனவும் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துருகிரியவில் இடம்பெற்ற 'கடன் சுமை, வரி சுமை மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம்' என்னும் சொற்பொழிவு நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இப்போது பெரியப் பிரச்சினையாகவுள்ளது மத்திய வங்கி ஆளுநரின் பிரச்சினை. இவர் பத்து மில்லியனுக்கு அதிகமாக கடன் பத்திரத்தை வெளியிட்டுள்ளதாக இணையம் ஊடாக பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பிறகு அந்தத் தொகையை வட்டி இல்லாமல் பயன்படுத்தியதாகவும், இதில் 50,000 மில்லியன் டொலர் கடன் பத்திரங்களை வாங்கியது இந்த நாட்டின் பிரஜை அல்லாத அவருடைய மருமகன் என்றும் அநுர குமார குறிப்பிட்டுள்ளார்.
இது மாமா - மருமகன் ஒப்பந்தம் என்றும், ஊழலை எதிர்க்கும் நல்லாட்சி இந்த நபரை தண்டிக்காமை ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரின் நிறைவுக்கு வரும் கால எல்லையை மீண்டும் நீடிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும், இதனை தெரிவித்தது அமைச்சர் என்றாலும் இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் பிரதமர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் நிதிக் குற்றப் பிரிவானது கடந்த கால ஆட்சியின் போது ஊழல், மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒன்றென பிரதமரும், ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அது பொய் இதற்கு ஒரு உதாரணமாக பொலிஸ் அதிகாரி அநுர சேனநாயக்க தனது பதவியில் இருந்து கொண்டே பல குற்றங்களை செய்துள்ள விடயமானது பொலிஸார் மூலமே உறுதிப்படுத்தப்பட்டும் தவறு செய்தவர்களை காப்பாற்றவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நல்லாட்சி செயற்படுமானால் என்றோ ஒருநாள் முன்னாள் பொலிஸ் அதிகாரியான வாஸ் குணவர்த்தன தான் செய்த குற்றங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டால் மாத்திரமே அவர் செய்த கொலைகள் மக்களுக்கு தெரியவரும் என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறானவர்கள் செய்துள்ள குற்றங்களானது மக்களுக்கு தெரியாமலேயே மண்ணுக்குள் புதைந்து விடுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு வேண்டுமெனில் பழைய சம்பிரதாய அரசியலிலிருந்து நாட்டை மீட்டு மக்கள் விடுதலை முன்னணியிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைத்தால் உங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என சகோதரத்துடன் கோரிக்கை விடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.