முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2015 ஜனவரி 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இரண்டு தடவைகள் இந்நாட்டை ஆட்சி செய்து நாட்டுக்கு தேடிக் கொடுத்த அபகீர்த்திகளும், நெருக்கடிகளும் போதும்.இனியும் அவை இந்நாட்டுக்குத் தேவை இல்லை.
அவை நீடிக்குமாயின் நாடு உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேசத்திலும் பலவித நெருக்கடிகளுக்கு உள்ளாகி நாடே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டு விடும்.
அதனால் இன்றைய யுகத்திற்குப் பொருத்தமான தலைவரே நாட்டுக்குத் தேவை என்றபடி மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனநாயக முறைப்படி இந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர்.
மக்களின் இந்தத் தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும் மக்களின் ஆணையை மதித்து வீடு செல்வதாக முதலில் காண்பித்துக் கொண்ட அவர், சொற்ப காலத்தில் தன் உண்மை முகத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினார்.
அது அவர் அரசியல் அதிகாரத்தின் மீது கொண்டிருக்கும் வேட்கையையும், மோகத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்தப் பின்புலத்தில் அவர் இந்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் முதலில் பிளவை ஏற்படுத்தினார்.
தனக்குச் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ஒரு பிரிவை கட்சிக்குள்ளும், பாராளுமன்றத்திலும் தோற்றுவித்தார்.
அவர்கள் ஊடாக தமக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காண்பிப்பதற்காக தென்பகுதியில் சில கூட்டங்களை நடத்தினார்.
அக்கூட்டங்களில் முதலில் பங்குபற்றாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, சொற்ப காலத்தில் அக்கூட்டங்களில் பங்குபற்றத் தொடங்கினார்.
இந்நடவடிக்கைகளின் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தி எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்திடவே அவர் முயற்சி செய்து வருகின்றார்.
அவ்வாறான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக நாளை 28ம் திகதி கண்டியிருந்து கொழும்புக்கு நடைபவனியை மஹிந்த அணியினரான 'ஒன்றிணைந்த எதிர்க்கட்சி' எனக் கூறிக் கொள்வோர் நடத்துகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் ஆதரவு இருக்கும் தம் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக அவர் கூற முற்படுகிறார்.
மக்கள் தமக்கு அளிக்கும் ஆதரவு மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் அவர் முயற்சி செய்கின்றார். ஆனால் இவரது முயற்சிகளையும், வாக்குறுதிகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.
இதற்கு 2015 ஜனவரி 08 ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரான சொற்ப காலம் முதல் இவர் மேற்கொண்டு வரும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து வருவது சிறந்த உதாரணங்களாக உள்ளன. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.
இந்நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், அதாவது 1978ம் ஆண்டு முதல் இந்நாட்டை ஆட்சி செய்த எல்லா ஜனாதிபதிகளும் தம் பதவிக் காலம் முடிவுற்றதும் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து வீட்டுக்குச் சென்றனர்.
புதியவர்களுக்கு அவர்கள் இடமளித்தனர். அதுதான் வரலாறு.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்தப் பாரம்பரியத்திலிருந்து வெளியேறி தாம் தொடர்ந்தும் அரசியலதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற தமது அரசியலதிகார வேட்கையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.
இதற்கு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானதும் நல்ல உதாரணம். இவரைப் போன்று- வேறு எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியுமே செயற்படவில்லை.
இவ்வாறான நிலையில் கண்டியிலிருந்து கொழும்புக்கு மஹிந்த நடத்தவிருக்கும் நடைபவனி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரனிடம் நேற்று முன்தினம் கேள்வியொன்றை எழுப்பி இருந்தார்.
அக்கேள்விக்குப் பதிலளித்துள்ள எம். பி. சுமந்திரன், 'மஹிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் எந்த முயற்சியினாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளைத் தடுத்து விட முடியாது.
அவர் முன்னெடுக்கும் குந்தகமான செயற்பாடுக்குக்கு சிங்கள மக்கள் உடன்படப் போவதில்லை' என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார்.அதுதான் உண்மை.
2015 ஜனவரி 08 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதன் பின்னரான சொற்ப காலம் முதல் நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கும் நல்லிணக்க முயற்சிகளைத் தடுத்திடவும் மஹிந்த அணியினர் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியுமே கைகூடவில்லை.
அவ்வாறான முயற்சிகளில் ஒன்றாகவே இந்த நடைபவனியும் பதிவாகும்.அவ்வளவு தான்.
மற்றப்படி முன்னாள் ஜனாதிபதியும் அவரது அணியினரும் குந்தகமான செயற்பாடுகளை மேற்கொண்டு நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு நாட்டு மக்கள் எவ்விதத்திலும் தயாரில்லை. என்றார்.

