கணவனை கோடரியால் கொன்ற மனைவி




அம்பாறை - தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று சனிக்கிழமை (30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். 

திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்கிடையே சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை இரவு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

கணவன் வேறு பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்குக் காரணம். 

இதன்படி மோதல் முற்றிய நிலையில் கோவம் கொண்ட மனைவி வீட்டில் உள்ள கோடாரியை எடுத்து கணவனின் மீது தாக்கியதில், அவரின் கழுத்து மற்றும் தலையில் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளார். 

இதனையடுத்து, அவரை திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவேளை, கணவனை கோடாரியால் தாக்கிய 46 வயதுடைய மனைவியை கைதுசெய்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். 

இது தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.