யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சுதந்திரமான மனநிலையுடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டுமொருமுறை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

