இன்று ஆரம்பமான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தாமதமாக சென்ற, பரீட்சை நிலையமொன்றுக்குப் பொறுப்பான அதிகாரியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஸ்பகுமார தெரிவித்தார்.
கம்பஹா – ஹேனேகம மத்திய மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்திற்கான பொறுப்பதிகாரி தாமதமாகி சமூகமளித்தமையால் காலை 08.30 க்கு ஆரம்பமாகவிருந்த இன்றைய பரீட்சை 9.30 இற்கே ஆரம்பமானது.
இதுகுறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஸ்பகுமாரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாமதமான ஒரு மணித்தியாலத்தை மீண்டும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் தோற்றுகின்றனர்.
பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்தில் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை வைத்திருந்தால் அவர்களுக்கு ஐந்து வருட பரீட்சைத்தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

