பம்பலப்பிட்டி வர்த்தகரின் சடலம் மீதான மரண விசாரணை இன்று



மாவனெல்லை – ஹெம்மாத்தகம வீதியின் ருக்குல்கம பகுதியிலிருந்து மீட்கப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரின் சடலம் மீதான மரண விசாரணை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
சடலம் மீட்கப்பட்ட பகுதியில் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மாவனல்ல மாவட்ட நீதவான் மகிந்த லியனகமவினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
இதன்பொருட்டு வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தை ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மாவனெல்லை – ஹெம்மாத்தகம வீதியின் ருக்குல்கம பகுதியில் இருந்து உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.
வீதியிலிருந்து 5 மீற்றர் தூரத்தில் தனியார் பகுதியிலுள்ள செங்குத்தான பரப்பிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக  பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று மாலை கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கடத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர்களுடன் நேற்றிரவு அந்த இடத்திற்கு சென்றிருந்தனர்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காட்டப்பட்டிருந்தது.
உயிரிழந்தவரின் தந்தை மற்றும் அவரது சகோதரரிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ஷாகிப் சுலைமான் இந்த மாதம் 22 ஆம் திகதி பம்பலப்பிட்டிய கொத்லாவலை பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டிருந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதான ஷாகிப் சுலைமான் தனது தந்தையுடன் இணைந்து, இந்தோனேஷியா மற்றும் சீனாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சில வர்த்தகர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்ற விசாரணை பிரிவிற்கு ஷாகிப் சுலைமான் முறைப்பாடு முன்வைத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.