“எழுக தமிழ்” பேரணி இன்று




தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “எழுக தமிழ்” பேரணி இன்று (24) முன்னெடுக்கப்படவுள்ளது.
நல்லூர் கோவில் வளாகம் மற்றும் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா சந்தி ஆகிய இடங்களில் இருந்து காலை 9 மணியளவில் இரு அணிகளாக இந்த பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இரு அணிகளும் யாழ்ப்பாணம் பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் இணைந்து, யாழ். நகரூடாக கோட்டை முனியப்பர் கோவில் வளாகத்தை சென்றடையவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் நல்லூரில் ஆரம்பமாகும் பேரணியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன் இந்தப் பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமையை அகிம்சை வழியில் வலியுறுத்தும் ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டு பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.