மதுபான பாவனை ஏற்படுத்தும் தாக்கங்களை குறைக்க முற்படுவோம்



(க.கிஷாந்தன்)

இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மதுபானம், போதைபொருள் தகவல் நிலையம் மற்றும் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் ஆகியன இணைந்து பெருந்தோட்டப் பகுதியில் மதுபானம் அருந்துவதால் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று 28.09.2016 அன்று அட்டன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய அலுவலகத்தில் “சிறுவர்களின் வளர்ச்சிக்கு மதுபான பாவனை ஏற்படுத்தும் தாக்கங்களை குறைக்க முற்படுவோம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டதாவது,

தெரிவு செய்யப்பட்ட 12 பெருந்தோட்டங்களில் 236 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 201 கணவன்மார் அதாவது 85 வீதம் மானோர் மதுபானம் அருந்துகின்றனர்.

மேலும் 91 வீதமான பெண்கள் கணவன்மார்களின் மதுபாவனையினால் பிள்ளைகளுக்குப் பாதிப்பாக அமைவதாகவும் குறிப்பிட்டனர். குறிப்பாக கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஏனைய துன்புறுத்தல்கள் ஆகிய பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிடுவதாகவும் அறியப்பட்டுள்ளது.

இதன்போது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை குறைப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன,

மதுபான பாவனையினால் சிறுவர்கள் பாதிக்கப்படும் விதம் தொடர்பாக சமூகத்தை விழிப்புணர்வூட்டுதல்.

மதுபானம் பாவிப்பவர்களின் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சமூகம் அனைத்து மட்டங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ளல்.

சிறுவர்கள் மதுபான பாவனைக்கு பழகும் அடிப்படைக் காரணிகளை கண்டறிந்து அவற்றை பலமிழக்க செய்தல்.

குறிப்பாக ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் மதுபான விளம்பரங்கள் தொடர்பாக சிறுவர்களை விழிப்புணர்வூட்டுதல்.

மதுபானத்தை விளம்பரப்படுத்தும் ஊடகங்களுக்கு சமூக அழுத்தங்களை ஏற்படுத்தல்.

அரசியல்வாதிகள் புதிதாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்காமிருத்தல்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது வளவாளர்களாக கலந்து கொண்டவர்கள்,

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார நிகழ்ச்சித்திட்ட அதிகாரி அனிருத்த பண்டார மற்றும் முகாமையாளர் காந்தி பண்டார, மதுபானம் மற்றும் போதைபொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி. றஹீம், கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.