கல்முனை முதலாளி காத்தான்குடியில் சடலமாக மீட்பு



-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்க-
கல்முனைக்குடி சாய்பு வீதியைச் சேர்ந்த முதலாளியான சீனிமுஹம்மது முஹம்மது பாறூக் (வயது 60) என்பவரின் சடலத்தை மட்டக்களப்பு, காத்தான்குடி 6ஆம் குறிச்சியை அண்டிய கடற்கரையில் திங்கட்கிழமை பொலிஸார்; மீட்டுள்ளனர்.   
குறித்த இடத்தில் சடலம் காணப்படுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தானும் தனது முதலாளியும் பட்டா ரக வாகனத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கல்முனைப் பிரதேசத்துக்குச் செல்லும் வழியில் வழமையாக காத்தான்குடிக் கடற்கரையில் உறங்கிவிட்டுச் செல்வதாக குறித்த வாகனச் சாரதி தெரிவித்தார். 
அவ்வாறே ஞாயிற்றுக்கிழமையும் (25)  யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட தாம்,  காத்தான்குடிப் பிரதேசத்தை அடைந்தபோது  கடற்கரையில் உறங்கியதாகவும் இன்றையதினம் அதிகாலை தனது முதலாளியை எழுப்பியபோது அவர் அசைவு அற்றுக் காணப்பட்டார். 

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் அவர் கூறினார். தனது முதலாளி இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதுடன், கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக குறித்த முதலாளியுடன் தான் பணி புரிவதாகவும் பொலிஸாரிடம் சாரதி கூறினார். -