யாழ், பல்கலைக்கழக தொழுகை அறைமீது தாக்குதல்!



யாழ். பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் ரஸீம் தெரிவித்துள்ளார்.
குறித்த தொழுகை அறையிலுள்ள மின்விசிறி மற்றும் கதிரைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று காலை ஒன்பது மணியளவில் பல்கலைக்கு வந்த முஸ்லிம் மாணவர்கள் தொழுகை அறைக்கு சென்றபோது அங்கு உட்பிரவேசிப்பதற்கு தடை வித்திக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருந்ததுடன், அறையின் கதவு பூட்டப்பட்டி இருந்ததாகவும் பின்னர்அறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது, சேதமாக்கப்பட்ட நிலையில் அறை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த விடையம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினவிய போது தாம் காலை ஆறு முப்பது மணியளவில் அறையை திறந்ததாகவும் பின்னர் எட்டு மணியளவில் சென்று பார்த்த போது இவ்வாறு அறை சேதமாக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பலக்லைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக, தெரிவித்த அவர், கடந்த காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்ற போது நிர்வாகத்தினால் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என வாய்மொழிமூல வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும் அவை இன்று மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுவரை நேரமும் தொழுகை அறைக்கு செல்வதற்கான அனுமதியோ, அறைய உள்ளே பார்ப்பதற்கான அனுமதியோ வழங்கப்படவில்லை என்றும், அறை பூட்டியே காணப்படுவதாகவும் மஜ்லிஸின் தலைவர் ரஸீம் மேலும் தெரிவித்தார்.
குறித்த பல்கலைக்கழகத்தில் 600 மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.