(க.கிஷாந்தன்)
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் என்னும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 35வது ஆண்டு நிறைவு நிகழ்வு 14.10.2016 அன்று நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பி.எம்.குமார் அவர்களின் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா புதிய நகர மணடபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மா நகர சபை மேயர் மஹிந்த தொடம்பே க மகே, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் எனும் நிறுவனத்தின் இணையத்தளம் ஒன்று உத்தியோகபூர்வ திறந்து வைக்கப்பட்டது. மேலும் கலை, காலாச்சார நிகழ்வுகளுடன், சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அத்தோடு சிறுவர்களுடைய உரிமைகள் தொடர்பான சமவாயங்கள், சிறுவர்களின் பொறுப்புகள் தொடர்பான கையேடுகள் வெளியிடப்பட்டது.
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் எனும் நிறுவனம் உலகத்தில் 121 கிளைகளை கொண்டு இயங்கி வருவதோடு நுவரெலியா மாவட்டத்தில் இக்கிளை சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளை இவ் நிறுவனம் பொறுப்பேற்று அவர்களை சிறந்த ஒரு பிரஜையாக சமூகத்தில் உருவாக்கி வருகின்றது.
இதன் காரணமாக பல சிறுவர்கள் இன்று இவ் நிறுவனத்தின் அரவணைப்பால் கல்வி கற்று பல்கலைகழகம் வரை சென்றுள்ளதோடு பலர் நல்ல தொழில் வாய்ப்பிலும் ஈடுப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

