'உயர் கல்வியின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகரிப்பு'



-எம்.எஸ்.எம். ஹனீபா
 
இலங்கையின் உயர் கல்வியின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகரித்துக் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்க்பபட்டுள்ள வியாபார நிர்வாக மானி முகாமைத்துவப் பட்டப் பின்படிப்பு கற்கை நெறி அங்குராப்பண வைபவம், இன்று சனிக்கிழமை (22) ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன் தலைமையில் நடைபெற்ற வைபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
'ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்hறார்கள். அந்த வகையில் இக் கற்கை நெறியைப் பயில்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் இதன் மூலம் கூடிய வருமானத்தைப் பெறுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ய முடியும்.
 
'கல்வியாளர் ஒருவர் தனது தொழிலுடன் மட்டும் நின்று விடாது மேற்படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் செல்வாக்கினைப் பெறுவதோடு உயர்ந்த தொழில் வாய்ப்புகளையும் பெற முடியும்.
 
'இலங்கையின் உயர்கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை வழங்கி வரும் இப் பல்கலைக்கழகம், சர்வதேச மட்டத்தில் ஒரு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக மாறி இலங்கையின் நிலையான அபிவிருத்திக்குத் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றது.
 
'இப் பல்கலைக்கழகம் பிரதேசம் சார்ந்த இவ்வாறான பட்டப்பின்படிப்புகளை ஆரம்பித்து நாட்டின் உயர் கல்விற்கு பெரும் பங்காற்றி வருவதனை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்' என்றார்.