-வரவனை செந்தில்-
கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி இந்தியாவின் உயர்ந்த மதிப்புள்ள தாள்களான 1000 மற்றும் 500 ரூபாய்களை செல்லாது என அறிவித்தார்.
இதன்மூலம் கறுப்புபணம் ஒழியும் என்றும் தெரிவித்திருந்தார். வரும் டிசம்பர் 31-க்குள் அனைத்து 1000 மற்றும் 500 ரூபாய்தாள்களை வங்கிகளில் செலுத்தி புதிய தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் பிரதமர் மோடி. ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரை எந்த ஒரு அடையாள அட்டை இன்றி பணம் மாற்றிக்கொள்ள முடியும் என்றும், ரூ.4 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் பணம் மாற்றினால், அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும் எனவும் தன் உரையில் தெரிவித்தார். (ஆனால் 500 ரூபாய் மாற்றக்கூட அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது) வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படாத நோட்டுக்களை, ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த உரையில் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் இன்றுவரை ஒருவாரகாலமாக நாட்டின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பாடு படு திண்டாட்டமாக இருந்து வருகிறது. வங்கிகளில் குவியும் மக்கள் ஒருபுறம், அன்றாடம் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் என்கிற நிலையில் அதை விடுத்து வங்கிகளுக்கு சென்று தங்களின் சின்னச்சேமிப்புகளை கூட மாற்றவேண்டி அலைந்த ஏழைகள் ஒருபக்கம். மற்றொரு பக்கம் ஏடிஎம்கள் வேலை செய்யாமல் அடிப்படை செலவுகளுக்குகூட மக்கள் பலமணிநேரம் காத்திருந்து பணம் எடுக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட தாள்களை கறுப்புபண முதலைகள் ஏழை மக்களின் கைகளில் கொடுத்து மாற்றுகிறார்கள் என்பதால் இன்று முதல் பழைய தாள்களை மாற்றுபவர்களின் கைகளில் அடையாள மை வைக்கப்படும், எனவே வாரம் ஒரு முறை மட்டுமே மாற்றமுடியும் என அறிவிக்கப்பட்டது. பல வங்கிகளுக்கு தேர்தலில் பயன்படுத்தும் மை வந்து சேர தாமதமாகியது.
அதன் பின்னர் சில தனியார் வங்கிகளில் வைக்க தொடங்கிய போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ரிசர்வ் வங்கியின் மை வைக்கவேண்டும் என்கிற உத்தரவில் பொதுமக்களின் வலது கை ஆட்காட்டி விரலில்தான் வைக்க வேண்டும் என இருந்துள்ளது. எனவே அனைத்து வங்கியிலும் வலது கை ஆட்காட்டி விரலில் அடையாள மையை வைத்தனர். இந்திய தேர்தல் கமிஷன் பயன்படுத்தும் மையில் உள்ள 'சில்வர் நைட்ரேட்' என்கிற வேதிப்பொருள் கேன்சரை வரவழைக்க கூடியது என்று ஆய்வறிக்கைகள் எழுதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான இந்திய மக்கள் கைகளால்தான் உணவு உண்டு வருகின்றனர்.அவர்களில் 99 சதவிகிதம் மக்கள் வலதுகை பழக்கம் உடையவர்கள். மேலும் தேர்தல் காலங்கள் போல் இந்த ஒரு முறையோடு அடையாள மை வைக்கும் வேலை முடிந்துவிடப்போவதில்லை. கோடிக்கணக்கான சிறுவியாபாரிகள் தவிர்க்க முடியாத சூழலில் இன்னமும் 500,1000 தாள்களை காலக்கெடு இருப்பதால் வாங்கி வருகின்றனர். அவற்றை வங்கிகளில் வாரம் ஒரு முறை மாற்றினால் கூட இன்னும் 6 வாரங்களுக்கு வைக்க வேண்டியிருக்கும். இப்படி தொடர்ந்து வலது கை ஆட்காட்டி விரலில் 'சில்வர் நைட்ரேட்' கலந்த அடையாள மை வைக்கப்படும் போது அவர்களின் உணவுவில் கலந்து உடலுக்குள் செல்லும் வாய்ப்பு அடிக்கடி ஏற்படும். இன்று பல்வேறு இடங்களில் பொது மக்கள் உணவு சாப்பிடும் வலது கை ஆட்காட்டி விரலில் அடையாள மை வைத்தது குறித்து ஆட்சேபம் தெரிவித்தனர்.
இது பற்றி சமூக நீதிக்கான மருத்துவ சங்கத்தை சேர்ந்த பிரபல மருத்துவர் எழிலன் அவர்களிடம் கேட்ட போது " ஒருமுறை பயன்படுத்துவதால் கேன்சர் அளவுக்கு பயப்படத்தேவையில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரை எந்த வேதிப்பொருளும் உடலுக்கு ஒவ்வாதுதான். பயன்படுத்தகூடாது என்றுதான் சொல்லுவேன்" என்றார். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளை தவிர்த்து மற்ற ஊர்களிலாவது இடதுகை ஆட்காட்டிவிரலில் வைத்திருக்கலாம். இனி வரப்போகும் வாரங்களில் இந்த அச்சத்தில் இருந்து விடுபட ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்கள் மையிட்ட கைகளால் உணவருந்தாமல் தவிர்க்கலாம். சில நாட்களுக்கு ஸ்பூனிலோ, அல்லது அந்த விரலில் உணவு படாமலோ பார்த்துக் கொள்ளுதல் நலம். அவ்வளவு எளிதில் மை அழியாது. இருந்தாலும், மேல்புறத்தில் எளிதில் அழியக்கூடிய லேயர் இருக்கும். அதை கழுவிவிடுவது நல்லது.
-வரவனை செந்தில்

