நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது வீட்டில் காலமான புகழ்ப்பெற்ற பிரிட்டன் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேலுக்கு உலகெங்கிலுமிருந்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவருக்கு வயது 53.
பாடகரும், இசையமைப்பாளருமான எல்டன் ஜான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஓர் ஆத்ம நண்பரும், திறமையான கலைஞருமான ஜார்ஜ் மைக்கேலை இழந்து விட்டதில் தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
1980-களில் ஜார்ஜ் மைக்கேலுடன் இணைந்து 'வாம்' பாப் இசைக்குழுவை உருவாக்கிய ஆந்த்ரூ ரிஜ்லி, ஜார்ஜ் மைக்கேலின் மறைவால் தனது இதயம் நொறுங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
மிகவும் வெற்றிகரமான இசைப்பயணத்தில், ஜார்ஜ் மைக்கேலின் இசைத்தட்டுகள் உலகெங்கும் பல மில்லியன் அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
ஆனால், பிற்காலத்தில் போதைப்பொருள் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் மைக்கேலின் வாகனம் ஒரு விபத்துக்குள்ளான போது, சிறிது காலம் அவர் சிறையில் இருக்க நேர்ந்தது. ஜார்ஜ் மைக்கேலின் கார் விபத்துக்குள்ளான போது, அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக கூறப்பட்டது.
ஜார்ஜ் மைக்கேலின் மரணத்தை சந்தேகத்துக்குரியதாக தாங்கள் கருதவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

