கலகொட அத்தே ஞானசார தேரர் விவகாரத்தின் காரணமாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவுக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் சபை யில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்போது அமைச்சுப் பதவிக்காக எதனையும் செய்வீர்கள் என ஹிஸ்புல்லாவை நோக்கி கூறிய நீதி அமைச்சர், எங்களை நோக்கி தற்போது கைகாட்ட வேண்டாம் எனவும் கடும் தொனியில் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை முஸ்லிம் விவகாரம், தபால்துறை அமைச்சின் செலவின தலைப்பிலான குழுநிலை விவாதத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.யோகேஸ்வரனின் உரையின் போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் விஜேதாஸவின் உரையை அடுத்தே சர்ச்சை ஏற்பட்டது.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும் என்று யோகேஸ்வரன் எம்.பி. வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, சட்ட நடவடிக்கை எடுப்பதில் பிரச்சினை இல்லை. எனினும் இதனூடாக சிறிய சிறிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதனை விட பேச்சு மூலம் தீர்க்க முற்படுகிறோம். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பவில்லை என்றார்.
இதன் போது எழுந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பேசுகையில், ஜனாதிபதியுடன் நடந்த சர்வமத பேச்சுவார்த்தையின் பின்னர் கூட, ஊடகவியலாளர் மாநாடு நடத்தி அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் இழிவாக பேசியுள்ளார். தமது இறைவனை தூற்றுவதானது, முஸ்லிம்களை வேதனைக்குட்படுத்தும் செயலாகும்.
எனினும் ஞானசார தேரரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை. இதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதன் போது கடும் சினமுற்று பேச ஆரம்பித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, நல்லாட்சியில் இப்படி பேசுகிறீர்கள். எனினும் அளுத்கம சம்பவத்தின் போது அன்றுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் ஒருவர் கூட எதிர்த்துப் பேசவில்லை. நானும் கிரியெல்ல அமைச்சருமே சபையில் கடும் எதிர்ப்பு வெளியிட்டு பேசினோம்.
நீங்கள் அதன் போது வேறு எதனையோ பேசினீர்கள். ஆனால், தற்போது வாய்கிழிய கத்துகிறீர்கள். நீங்கள் அங்கம் வகித்த முன்னைய ஆட்சியின் போதே இந்த நிலைமை ஏற்பட்டது.
பாதுகாப்பு செயலாளர், மஹிந்த ராஜபக்ஷ எம்மை பாதுகாப்பார்கள் என எண்ணினீர்கள். அமைச்சு பதவியும் வரப்பிரசாதங்களும் பெறுவதற்காக நீங்கள் எதனை வேண்டுமானாலும் செய்வீர்கள். மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் நீங்கள்.
இனமுறுகல் நிலைமையை நினைத்தவுடன் தீர்க்க முடியாது. எமக்கு கால அவகாசம் வேண்டும். எனக்கும் சமூக வலை தளங்களில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர். மிகவும் கேவலமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
காட்டுமிராண்டித்தனமான சமூகத்தை நீங்களே உருவாக்கியுள்ளீர்கள். அவர்களை நேர்வழிப்படுத்தவே நாம் முனைகிறோம். வீண்வாதம் வேண்டாம். இனவாத அரசியலை முன்னெடுக்க வேண்டாம். வரப்பிரசாதங்களை பெறவே நீங்கள் சரி.
இதன்போது இருவரும் சரமாரியாக விவாதித்துக் கொண்டனர்.
தொடர்ந்தும் ஞானசார தேரரின் அடாவடித்தனம் அதிகரிக்கிறது. இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வினவினார்.
இதற்கு உடன் நடவடிக்கை எடுக்க முடியாது. காலம் தேவை. அமைச்சு பதவிகளுக்காக ஏன் இப்படி செயற்படுகிறீர்கள் என நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

