அம்பாறையில் 4 ஒசுசல நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், முதலாவது ஒசுசல நிலையத்தை நிந்தவூர் பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாகவும் சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள், மற்றும் உபகரணங்களைக் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வழங்கி வைத்தபோதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கான கட்டட வசதி, உபகரணங்கள், மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன்' என்றார்.
'தற்போது தொற்றா நோய் பாரிய சவாலாகக் காணப்படுவதுடன், சுகாதாரத்துறைக்காக அதிகளவான நிதியை அரசாங்கம் செலவு செய்து வருகின்றது.
மேலும், நாடளாவிய ரீதியில் 10,000 தாதி உத்தியோகஸ்தர்களுக்கும் 5,000 வைத்திய நிபுணர்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இதேவேளை, கண்டி போதனா வைத்தியசாலையானது கட்டடப் பற்றாக்குறையுடனும் 200 தாதி உத்தியோகஸ்தர்கள் மற்றும் 60 மருத்துவர்களுக்கான பற்றாக்குறையுடனும் இயங்கி வருகின்றது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
எமது நாட்டில் மிகச் சிறப்பான முறையில் சுகாதாரச் சேவையை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இந்நிலையில், அநேகமான பொதுமக்கள் கூடுதலான பணத்தைச் செலவு செய்து, தனியார் மருத்துவ சேவைகளையே பெற்று வருகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

