பல சவால்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தானே தொடர்ந்து பிரதமராக செயல்படப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
இன்று பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு வீழ்த்தப்படுமென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் விக்ரமசிங்க, தான் ஒரு வாரத்திற்கு சுவிஸ் நாட்டில் விஜயமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும்
முடிந்தால் அந்த காலப்பகுதிக்குள் பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க சவாலொன்றை விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு, தான் விரும்பியதை செய்ய முடியுமென்று தெரிவித்துள்ள பிரதமர் விக்ரமசிங்க, பல சவால்கள் விடுக்கப்பட்ட போதிலும் தானே தொடர்ந்து பிரதமராக செயல்பட போவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துக்கொண்ட நிகழ்வொன்று இன்று (திங்கள்கிழமை) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அபிவிருத்தி இலக்குகளை வெற்றி காண்பது தொடர்பாக நாட்டில் பாரிய அளவில் மாநாடுகள் ,கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சகல தரப்பினரும் ஒற்றுமையாக செயல்படுவது அவசியமென்று தெரிவித்த சிறிசேன, இதன் முலம் மாத்திரமே அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியுமென்று, மேலும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்த போது ஊழல் மோசடியற்ற சமூகமொன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இவ்வேளையில், புதிய தேர்தல் முறை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

