-எம்.எஸ்.எம். ஹனீபா -
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வீதிகளில் குப்பைகளை வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல், புதன்கிழமை (04) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகளிலும் உள் வீதிகளிலும் குப்பை மற்றும் கழிவுகளை தினமும் வீசி வருவதனால் இப் பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும் டெங்கு நுளம்பு பரவக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றினால் தினமும் அகற்றப்பட்டு வருகின்றன. எனினும், குப்பைகளை அகற்றிய பின்னர் மீண்டும் குறிப்பாக வியாபாரிகள், வீதிகளில் அங்கும் இங்கும் அலங்கோலமான முறையில் குப்பைகளை வீசுவதனால் பிரதேசத்தின் அழகிய தோற்றம் மாசுபடுவதாகவும் மக்களும் நோய்களுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வியாபார நிலையங்களில் சேருகின்ற குப்பை கூழங்களை, ஓர் இடத்தில் சேமித்து வைத்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு ஆவண செய்யவும். இது தொடர்பாக வியாபாரிகளுக்கும் பொது மக்கள்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுவோர் மீது 2008ஆம் ஆண்டின் 44 இலக்கத் தேசிய பொது வழிகள் சட்டம் 73 (1) இன் பிரகாரம் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று, அவர் மேலும் தெரிவித்தார்.

